மதுரையில் நகைச்சீட்டு நடத்தி ரூ.1.75 லட்சம் மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் எம்.கே.புரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நகைக்கடையில் நகைச்சீட்டு ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வந்து, காலம் முடிவடைந்ததும் வட்டித் தொகையும் சேர்க்கப்பட்டு அதற்குரிய மதிப்பில் நகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவரது வாக்குறுதியை நம்பி அதே பகுதியைச் சேர்ந்த பலர் நகைச்சீட்டு சேர்ந்துள்ளனர்.
இதில் ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ராஜேஸ்வரி(54) சீட்டு சேர்ந்து ரூ.1.75 லட்சம் செலுத்தியுள்ளார். சீட்டு காலம் முதிர்வடைந்தும் குமரேசன் நகை தராமல் அலைக்கழித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸார் நகைக்கடை உரிமையாளர் குமரேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.