பஞ்சாலை தொழிலாளர்கள் பிப்ரவரி 26-இல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநில பாஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் சி.பதமநாபன் தலைமையில் செவ்வாயக்கிழமை நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில நிர்வாகி திருப்பூர் சந்திரன் உள்பட பஞ்சாலை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழக பஞ்சாலை தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளான, பஞ்சாலைகளில் நிலவும் சுமங்கலி திட்டம், கேம்ப் கூலி எனும் கொத்தடிமைத் தனம் ஒழிக்கப்பட வேண்டும். சம்பளத்தில் பாதி ஓய்வூதியத்தை அரசு வழங்க வேண்டும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும். அரசாணையின்படி பயிற்சியாளர்களுக்கு குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.421 வழங்க வேண்டும். தொழிலாளர்கள் இஎஸ்ஐ, தொழிலாளர் ஈட்டுறுதி, பணிக்கொடை, கேண்டீன் வசதி, குழந்தைகள் காப்பகம், சுகாதாரமான கழிப்பறை ஆகியவற்றை செய்து தரவேண்டும். கூட்டுறவு பஞ்சாலைகளில் பணி நிரந்தரம், மாத ஊதியம் ரூ.18ஆயிரத்தை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுதும் பிரச்சாரம் இயக்கம் நடத்துவது, பிப்ரவரி 26-இல் தமிழகம் முழுவதும் அரசு தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.