மதுரை தியாகராஜர் கல்லூரியில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் பல்கலைக் கழக நிதி நல்கைக் குழுவின் நிதியுதவியுடன் சர்வதேச அளவிலான இரு நாள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இயற்பியல் மாதிரியாக்கம் மற்றும் உயிர்வளங்களின் மேலாண்மை திட்டமுறைகளில் உள்ள தற்கால நடைமுறைகள் என்னும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கல்லூரித் தலைவர் கருமுத்து தி. கண்ணன் தலைமை உரையில், காந்தி, அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்வியல் நிகழ்வுகளில் இருந்து மேற்கோள் காட்டி, ஒரு சிறு பொறியே பெரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் என்றார். மேலும் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறுவதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, பட்நாகர் விருது பெற்ற பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர் மு.லக்ஷ்மணன் மாநாட்டு பேருரையாற்றினார். அயர்லாந்து நாட்டு தேசிய பல்கலைக் கழக கணிதவியல் பேராசிரியர் பெட்ரி பிரோனியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கணிதவியல், இயற்பியல் மற்றும் விலங்கியல் துறை சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாநாடு உயிர்வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பல்துறைகளில் ஆய்வுத்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் பேராசிரியர் கருத்தப் பாண்டியன் உயிர் வளங்களின் மேலாண்மை என்ற தலைப்பில் பேசினார். இளநிலை ஆய்வு மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் து. பாண்டியராஜா
வரவேற்றார். முடிவில் இணைப் பேராசிரியர் என்.சீனிவாசன் நன்றி கூறினார்.