மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 124 பயனாளிகளுக்கு ரூ.14.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்.
மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் தலைமை வகித்தார். வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா முன்னிலை வகித்தார்.
இதில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் என 124 பயனாளிகளுக்கு ரூ.14.88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கிப் பேசியதாவது:
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வார்டுகளுக்கும் இன்னும் 50 ஆண்டுகளுக்குத் தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில், முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப்பிலிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் ரூ.1,600 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதேபோல், வடக்குத் தொகுதிக்குள்பட்ட வண்டியூர் கண்மாய் ரூ. 64 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது என்றார்.