பாஜக, பாமகவைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 71ஆவது பிறந்த நாள் விழா குறித்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் மேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: சில நாள்களில் இந்த ஆட்சி போய்விடும் எனக்கூறி 18 எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்றவர்கள் இன்று கரைந்து கொண்டுள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் அதிமுக அரசு எப்படி உருவாக்கி வழிநடத்திச் செல்லப்பட்டதோ அதே வழியில் இரண்டரை ஆண்டுகளாக இந்த ஆட்சி நடந்து வருகிறது. அதிமுகவின் தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டுள்ளனர்.
கட்சியும், ஆட்சியும் மக்கள் நம்பிக்கையையும் சக்தியையும் பெற்றுள்ளதால் பாஜகவும், பாமகவும் அதிமுக கூட்டணியை முடிவு செய்துள்ளனர். மேலும் பலர் கூட்டணிக்கான பேச்சுவார்தையில் உள்ளனர். மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக உள்ளதால் மக்களுக்கு ரூ.6,000 உடன் தற்போது மேலும் ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. மேலும் பல நலத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்புள்ளது.
திமுக மீது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இப்போதும் அப்படியே மக்கள் மனதில் உள்ளது. கமலஹாசனை பார்த்து கிராம சபைக் கூட்டம் நடத்தும் ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றத்தில் பழங்குடியினர் ஒதுக்கீட்டின்பேரில் தடைபெற்றதே தேர்தலுக்கு தடையாக உள்ளது. அதிமுக கூட்டணி நூறு சதம் வெற்றிப் பெறும் என்றார்.
வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசியது: தமிழக அரசு மீதான ஊழல் புகார்களை மக்கள் நம்பவில்லை. திமுகவினர் மீது கூறப்பட்ட அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் மக்கள் மறக்கவே இல்லை என்றார்.