மதுரையில் அவனியாபுரம் பகுதியில் எதிரெதிரே உள்ள 2 வீடுகளில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
அவனியாபுரம் கிளாட் வே சிட்டி 3 ஆவது தெருவில் வசிப்பவர் ராகவன்(65). ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி. இவர் தனது மனைவியுடன் கடந்த 10 நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த நகைகள், பணம், விடியோ கேமரா, செல்லிடப்பேசி, ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட ரூ. ஒன்றரை லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்தப் புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
ராகவன் வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர் ஜெயசர்க்கரை(58). இவர் திருநெல்வேலியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி. புதுகோட்டை ராங்கியம் பகுதியில் ஆசிரியராக பணி புரிகிறார். இருவரும் விடுமுறை நாள்களில் மட்டுமே வீட்டிற்கு வருவார்களாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஜெயசக்கரை வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்து 22 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள் திருப்பட்டது தெரிய வந்தது.
இவற்றின் மதிப்பு ரூ.6.50 லட்சம். இது குறித்தப் புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.