திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் கண்மாயில் மீன் பிடிப்பதற்காக அனுமதியின்றி தண்ணீர் திறப்பதை தடுக்கும் விதமாக கண்மாயின் மடைக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ளிக்கிழமை பூட்டு போட்டனர்.
நிலையூர் கண்மாய், மதுரை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் ஆகும். இங்கு முதல்போக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட நிலையில், தற்போது குடிநீருக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் ஒரு சில விவசாயிகள் இரண்டாம் போக விவசாயத்திற்காகவும், கண்மாயில் மீன் பிடிப்பதற்காகவும் அதிகாரிகள் அனுமயின்றி மடையை திறந்து விட்டனர்.
இது தொடர்பாக கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்த பச்சம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில், மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர், துணைத் தலைவர் ஆகிய இருவரும் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த 4 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நிலையூர் கண்மாயில் மடை திறக்கப்பட்டு தொடர்ந்து தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் மோகன்குமார் உத்தரவின்பேரில், பணி ஆய்வர் வரதமூனீஸ்வரன் தலைமையிலான அலுவலர்கள் மடையை அடைத்து பூட்டுப்போட்டு சீல் வைத்துள்ளனர்.