மதுரை மாநகராட்சி பூங்காவில் செயல்பட்டு வரும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் கூடத்தை மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 இல் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் ஆணையர் ச.விசாகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 46 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மண்டலம் எண்.2க்கு உட்பட்ட வார்டு எண் 25 சூர்யா நகர் கே.வி.ஆர்.நகர் வடக்கு மற்றும் தெற்குத் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.5.27 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செம்மண் சாலை, வார்டு எண் 37 செல்லூர் கழிவுநீரேற்று நிலையத்தில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஜெனரேட்டர் மற்றும் மோட்டார் பம்புகள் பழுது நீக்கப் பணிகள், அழகர்கோவில் பிரதான சாலை மற்றும் 1 முதல் 4 வரையுள்ள குறுக்குத் தெருக்களில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்ச் சாலைப்பணிகளையும் ஆணையர் பார்வையிட்டார்.
மேலும் சூர்யா நகர் பூங்கா மற்றும் மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை சுற்றுச்சூழல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள, குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் கூடத்தையும் பார்வையிட்டு அவற்றை முறையாக பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட ஆணையர் உத்தரவிட்டார்.
சூர்யா நகர் பூங்காவில் குப்பைகள் உருவாகும் இடத்திலேயே உரம் தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்ட ஆணையர், அதை முறையாக பராமரித்து மாதிரி உரக்கூடமாக செயல்படுத்துமாறு உத்தரவிட்டார். இதில் துணை ஆணையர் ப.குமரேஸ்வரன், உதவி ஆணையர் பழனிச்சாமி, நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்க நாதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.