தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மனநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கக் கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிவகாசியைச் சேர்ந்த விஜயகுமார் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பல்வேறு நோய்களுக்கு சிறப்புச் சிகிச்சை மற்றும் அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் மனநோய்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை வழங்கப்படுவது இல்லை. ஆனால் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மனநோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
எனவே தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மனநோய்களுக்கும் சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.