குடிநீர் திருட்டு: மின் மோட்டார்கள் பறிமுதல்
திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் திருட்டில் ஈடுபட்டவர்களின் மின் மோட்டார்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகமெங்கும் கடும் குடிநீர் தடுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் நான்கு நாள்களுக்கு ஒருமுறை வரும் குடிநீரையும் சிலர் மின் மோட்டார் மூலம் சட்ட விரோதமாக எடுப்பதால் மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் விசாகன் உத்தரவின்பேரில், திருப்பரங்குன்றம் பகுதிகளில் மாநகராட்சி உதவி பொறியாளர் முருகன் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், பலர் வீடுகளில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டன. மேலும் இதுபோல மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் சோதனை நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.