மதுரையில் இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கான (சிமி) தடை ஆணையை, போலீஸார் அதன் அலுவலகச் சுவரில் சனிக்கிழமை ஒட்டினர்.
மதுரையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, திடீர் நகர் காவல் நிலையத்துக்குள்பட்ட ஹாஜிமார் தெருவில் செயல்பட்டு வந்த இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது, மத்திய அரசு சிமி இயக்கம் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, திடீர் நகர் காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீஸார், ஹாஜிமார் தெருவில் உள்ள இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்க அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கிருந்த அந்த இயக்கத்தின் முன்னாள் தலைவர் சையது அப்துலிடம் தடை ஆணையை வழங்கினர். ஆனால், அவர் அதை வாங்க மறுத்ததால், ஆணையை அலுவலக வாசல் சுவரில் ஒட்டிவிட்டு திரும்பியதாக, போலீஸார் தெரிவித்தனர்.