அவனியாபுரத்தில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டவரை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் மாரி (38). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே இருந்த முன் விரோதம் காரணமாக கடந்த 6 ஆம் தேதி மாரி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலமேடு பகுதியை அடுத்த சரந்தாங்கி மலைப்பகுதியில் கொலையாளிகளில் சிலர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் கார்த்திக்செல்வம் தலைமையிலான தனிப்படை போலீஸார் அங்கு சென்று கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு ரஞ்சித்குமார் (24), வினுச்சக்கரவர்த்தி (23), கார்த்திக் என்ற அகோரிகார்த்திக் (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய வெள்ளையம்பட்டியைச் சேர்ந்த அழகர், ராமர் ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த அழகர், மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று அழகரை கைது செய்து விசாரிக்கின்றனர்.