திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் 3 ஆவது பேருந்து நிறுத்தத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் மற்றும் "விவிபேட்' இயந்திரத்தின் செயல்பாடு குறித்து ஞாயிற்றுக்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் சார்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். வட்டாட்சியர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் வாக்கு இயந்திரம் மற்றும் "விவிபேட்' இயந்திரம் கொண்டு மாதிரி வாக்குச் சாவடி மையம் அமைத்திருந்தனர்.
அங்கு வரும் பயணிகளுக்கு வாக்களிப்பது குறித்தும், வரும் மக்களவைத் தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும் விளக்கமளித்தனர்.
மேலும் தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.