திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
கோயிலில் பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. மாலையில் பச்சைக்குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோயில் 6 கால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்க கிரீடம் சூட்டி, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவல் கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுவாமியின் பிரதிநிதியாக ரமேஷ் பட்டர் சுவாமியின் செங்கோல், சேவல் கொடி ஏந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் சனிக்கிழமை மதியம் 1 முதல் 1.30 மணிக்குள் நடைபெறுகின்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணிக்கு கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.