தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் ஆமத்தூரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனு: கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி எனது மனைவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தோம். அதில், அவரது கர்ப்பப் பையில் கட்டி இருப்பதும், அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறுவைச் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால், விருதுநகர் அரசு மருத்துவமனையில் எனது மனைவியை சேர்த்தேன். அங்கு, அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், எனது மனைவியின் வலது காலில் தொடர்ந்து வலி இருந்தது.
இதை அறிவதற்காக நடத்தப்பட்ட பரிசோதனையில், அறுவைச் சிகிச்சை தவறுதலாக செய்யப்பட்டதால் வலது கால் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதன் காரணமாக தொடர்ந்து கால் வலி ஏற்படுவது தெரியவந்தது.
அதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். ஆனால், அங்கும் எனது மனைவிக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. தற்போது, எனது மனைவியின் காலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, எனது மனைவியை தனியார் மருத்துவமனையில் சேர்த்து, அரசு செலவில் உயர் சிகிச்சை அளிக்கவும், தவறான சிகிச்சைக்கு காரணமான மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் மனைவிக்கு சிறந்த முறையில் உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை வேறு அரசு மருத்துவமனைக்கு மாற்றலாம். அதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.