திருமங்கலம் அருகே கோயில் திருவிழாவின்போது நிகழ்ந்த மோதலில், போலீஸார் ஒரு தரப்பினருக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் கூறி, பொதுமக்கள் தாலுகா காவல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருமங்கலத்தை அடுத்த சொக்கநாதன்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா கொண்டாடுவது குறித்து சில தினங்களுக்கு முன் இரு சமூகத்தினரிடையே பிரச்னை இருந்து வந்தது. அதையடுத்து, திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இரு தரப்பினரும் தனித்தனியாக திருவிழா கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒரு தரப்பினர் திருவிழா கொண்டாடும்போது காப்புக் கட்டுவதில் தகராறு ஏற்பட்டது. இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கைகலப்பில், சித்தம்மாள், பரத்காந்தி, லட்சுமி ஆகிய 3 பேர் காயமடைந்தனர். அதையடுத்து, பரத்காந்தி அளிடுத்த புகாரின்பேரில், போலீஸார் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேநேரம், மற்றொரு தரப்பினர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும், இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து போலீஸார்அச்சுறுத்துவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்து, சொக்கநாதன்பட்டியைச் சேர்ந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், திருமங்கலம் காவல் நிலையத்தை சுமார் ஒரு மணி நேரம் முற்றுகையிட்டனர். மேலும், காவல் நிலைய வாசல் முன்பாக அமர்ந்து, போலீஸாரை கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது, ஊரகக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அருண், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.