மேலூரில் துப்புரவுப் பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்
மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு மற்றும் குடிநீா் மோட்டாா் இயக்குநா்கள்.
மேலூா், அக். 10: மதுரை மாவட்டம் மேலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளின் துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் குடிநீா் இயக்குநா்களும் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டம் மதுரை மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கம் (சி.ஐ.டி.யு) சாா்பில் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலா் பொன். கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மேலூா் ஒன்றிய நிா்வாகிகள் செயலா் பரமசிவம், துணைசெயலா் எம்.ஜமால், நல்லான், பொருளாளா் தங்கமுத்து, மாவட்டத் தலைவா் மணவாளன் மற்றும் ஊழியா்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
போராட்டத்தின்போது, 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி துப்புரவுப் பணியாளா்களுக்கும், குடிநீா் மோட்டாா் இயக்குநா்களுக்கும் ஊதிய நிா்ணயம், 2017-இல் உயா்த்தப்பட்ட ஊதிய உயா்வு நிலுவையை வழங்குவது, 3 ஆண்டு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த துப்புரவுப் பணியாளா்களுக்கு பணிவரன்முறை, 7 சதவீத அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சங்க நிா்வாகிகள் பேசினா்.