மதுரையில் கார் மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த துப்புரவு ஊழியர் புதன்கிழமை உயிரிழந்தார்.
மதுரை அண்ணாநகர் பி.டி.காலனியைச் சேர்ந்தவர் தமிழரசன் (43). இவர் மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், புதன்கிழமை மருது பாண்டியர் தெரு உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் முன், தமிழரசன் உள்ளிட்ட பல ஊழியர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது கார் ஒன்று சாலையோரத்தில் நின்றிருந்த கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் தமிழரசன் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த தழிழரசன், அழகர், சங்கர பாண்டி ஆகியோரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தமிழரசன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த அழகர், சங்கர பாண்டி ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டி வந்த மதுரை மேலமடையைச் சேர்ந்த ஜெகநாதனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமா?: கார் ஓட்டி வந்த ஜெகநாதன்(27), பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், தனக்கு புதன்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது, அதற்காக வேகமாக சென்றபோது தான் விபத்து ஏற்பட்டது என போலீஸாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீஸார் ஜெகநாதனின் பெற்றோரை அழைத்து விசாரித்தபோது, மகனுக்கு திருமணமா, எங்களுக்கு தெரியாது என தெரிவித்தாக கூறப்படுகிறது. போலீஸார் ஜெகநாதனிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.