திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
தனக்கன்குளம் நேதாஜி நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் மகள் ரிஷிகா (3). இவர் திருநகரில் உள்ள தனியார் விளையாட்டு பள்ளியில் படிக்கிறார். கடந்த 2 நாள்களுக்கு முன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறுமிக்கு ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிஷிகா சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து சுகாதாரத் துறையினர் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தாயுமானவர், மாரிமுத்து, வரதராஜ், சுரேஷ் ஜெயகுமார் மற்றும் 20 பணியாளர்களுடன் தனக்கன்குளம் நேதாஜி நகர், எம்ஜிஆர் காலனி, வசந்தம் வில்லா உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனர். மேலும் குளிர்சாதன பெட்டிக்கு பின்பகுதியில் தண்ணீர் தேங்கும் பெட்டியில் கொசுப்புழுக்கள் வளரா வண்ணம் உப்பு, சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து வைக்குமாறு அறிவுறுத்தினர். மேலும் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காதவாறு வண்ணம் பார்த்துக் கொள்ள பொதுமக்களை அறிவுறுத்தினர்.