தனியார் நிதிநிறுவனத்தில் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரக் கோரி அந்நிறுவனத்தில் பணியாற்றிய முகவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில், 12 லட்சம் பேர் முதலீட்டாளர்களாகவும், முகவர்களாகவும் இணைந்து ரூ.1,200 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
பொதுமக்களிடம் முதலீடாகப் பெறப்பட்ட தொகையில் அந்நிறுவனத்தினர் நாடு முழுவதும் சொத்துக்களை வாங்கியுள்ளனர். ஆரம்பத்தில் முதிர்வுத் தொகையை சரியாக திரும்ப அளித்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட காலத்தில் முதிர்வுத் தொகையை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் முதலீடு செய்தவர்கள் முகவர்களுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இந்நிலையில், இந்நிறுவனம் செயல்பட "செபி' தடை விதித்தது.
நெருக்கடி மற்றும் மன உளைச்சல் காரணமாக முகவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நிதி நிறுவனத்தின் சொத்துகளை விற்று, முதலீட்டாளர்களுக்கு முதிர்வுத் தொகையை பட்டுவாடா செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அதற்கான நடவடிக்கையை நிறுவன உரிமையாளர்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை என முதலீட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, முதலீட்டாளர்களுக்கான தொகையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முகவர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் த.சு.ராஜசேகரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.