மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 10 தினங்களில் 4 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாக முதன்மையர் கே.வனிதா தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 10 தினங்களில், 4 பேர் "டெங்கு' பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை முதன்மையர் கே.வனிதா செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு நிலவி வருவதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் அனைவரும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றனர்.
கடந்த 10 தினங்களில் காயச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 4 பேருக்கு "டெங்கு' பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் நலம் பெற்று வீடு திரும்பி விட்டனர்.
"டெங்கு' பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தனி வார்டு மற்றும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. நோயாளிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்றார்.