அமமுக மாவட்டச் செயலரின் சகோதரரின் கட்டுமான நிறுவனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை சோதனையிட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரன். இவர் தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலராக உள்ளார். இவரது சகோதரர்
வெற்றிவேல். நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான வெற்றிவேலுக்கு மதுரை ஐராவதநல்லூரில் கான்கிரீட் கலவை நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி நாகரத்தினம் தலைமையில் காவல் உதவி ஆணையர் உதயகுமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் நிறுவனத்தின் அனைத்துப்பகுதிகளிலும் சோதனையிட்டனர். சோதனையின் முடிவில் பணம் மற்றும் ஆவணங்கள் உள்பட எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.