மதுரை அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உள்பட இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு(50). இவர் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இந்நிலையில், பாபு ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவரை ஏற்றிக் கொண்டு சமயநல்லூர் அருகே திண்டுக்கல் சாலையில் சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றுள்ளது.
இதில், இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த பாபு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சமயநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்தில் பலியான பெண் யார் என்பதும், அவரை பாபு ஏன் அழைத்துச் சென்றார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.