மதுரை தற்காலிக பெரியார் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிய வழக்கில் மதுரை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சியில் தற்போது சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பேருந்து நிலையம் முற்றிலும் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிழற்குடை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.