பாஜக தலைவர்கள் தங்களது சாதனைகளைக்கூறி வாக்கு சேகரிக்காமல், பிறரை விமர்சித்து வாக்கு சேகரிக்கின்றனர் என பேச்சாளர் நெல்லை கண்ணன் தெரிவித்தார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ப.மாணிக்கம்தாகூரை ஆதரித்து திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது: மத்திய அரசின் கவனக்குறைவால் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. பாஜக கடந்த முறை தேர்தலில் நின்றபோது கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
ராமர் கோயிலைக்கூட அவர்கள் கட்டவில்லை. பாஜக தலைவர்கள் தங்களது சாதனைகளைக்கூறி வாக்கு சேகரிக்காமல், பிறரை விமர்சித்து வாக்கு சேகரிக்கின்றனர். தமிழகத்தில் பிரதமர் மோடி தயவால்தான் ஆட்சி நிலைத்திருக்கிறது. திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் சோதனையிட்டவர்கள் முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன் என மக்கள் கேள்வி கேட்கின்றனர். அதிமுகவினர் பதவிக்காக பாஜகவுடன் கூட்டணியில் உள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பக்குவப்பட்ட தலைவராக திமுகவை வழிநடத்துகிறார்.
உங்கள் வாக்குரிமை என்பது காந்தி, காமராஜர், காயிதேமில்லத் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ரத்தம். அதனை நல்ல வழியில் பயன்படுத்துங்கள். உங்களது சந்ததியினரை மனதில் வைத்து அனைவரும் வாக்களியுங்கள் என்றார். கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம்தாகூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சரவணன், திமுக மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதி, மாவட்ட செயலர் எம்.மணிமாறன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் காளிதாஸ், மதிமுக பகுதி செயலர் முருகேசன், திமுக பகுதி செயலர்கள் கிருஷ்ணபாண்டியன், உசிலை சிவா
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.