மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிரசாரம் நிறைவு

மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை மாலை தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை மாலை தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை காலை மதுரை பெத்தானியாபுரத்தில் தொடங்கினார்.அக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சௌந்தரராஜன் பிரசாரத்தைத் தொடக்கி வைத்தார். 100-க்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் கூட்டணிக் கட்சியினர் அணிவகுத்துச் செல்ல இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் பொறித்த சின்னங்களை கைகளில் ஏந்திச் சென்றனர். இந்த ஊர்வலம் மேல-வடக்கு மாசிவீதி சந்திப்பில் நிறைவடைந்தது.
மாலை 4.30 மணிக்கு செல்லூரில் தொடங்கிய இரு சக்கர வாகனப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஜெய்ஹிந்துபுரத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் கூறியது: கடந்த 18 தினங்களுக்கும் மேலாக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்புடன் பல லட்சக் கணக்கான வாக்காளர்களை சந்தித்து வாக்குச் சேகரித்துள்ளேன். இது மிகுந்த மனநிறைவைத் தருவதாக உள்ளதோடு, எனது வெற்றியையும் வாக்காளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும் வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள  வி.வி.ராஜன்செல்லப்பாவும் தொகுதிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை. அடிப்படைத் தேவைகளைக் கூட பெரும்பாலான பகுதிகளில் நிறைவேற்றவில்லை என்பதை வாக்குச்சேகரிப்பின்போது அறிந்துகொள்ள முடிந்தது. இந்த இரண்டு தொகுதிகளிலும் எனக்கு மிக அதிகப்படியான வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மதுரை தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் எங்கள் கூட்டணியே வெற்றிபெறும் என்றார். 
இறுதி கட்ட பிரசாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இரா.விஜயராஜன், திமுக பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச்செயலர் சரவணன், மதிமுக மாவட்டச் செயலர் பொடா மு.பூமிநாதன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர் ப.கதிரவன் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com