மதுரையில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ. 1லட்சம் மோசடி செய்தவர் போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் வரதராஜன்(60). இவரது மகள் மருத்துவராக உள்ளார். அண்மையில் வரதராஜன் மகளுக்கு பெங்களூரு வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்தது. இதுகுறித்து மருத்துவமனையில் இருந்த தனது மகளிடம் தொலைபேசியில் விவரத்தை வரதராஜன் கூறியுள்ளார். அப்போது நோயாளியாக சமயநல்லூரை சேர்ந்த பிரகாஷ்(31) வந்திருந்தார். அவர் தொலைபேசி உரையாடலை பயன்படுத்தி, தான் வருமான வரித்துறையில் அதிகாரியாக பணிபுரிவதாகவும், நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை தன்னால் குறைக்க முடியும் என கூறியுள்ளார்.
இதை நம்பி, வரதராஜன் ரூ1.08 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் பிரகாஷை தொடர்புக் கொண்டு ரசீது கேட்டபோது, தான் வருமான வரித்துறையில் பணிபுரியவில்லை, பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, எஸ்.எஸ். காலனி போலீஸாரிடம் வரதராஜன் திங்கள்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.