வாக்குப்பதிவு நாளில் விடுப்பில் செல்லும் தொழிலாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் ஜெ.காளிதாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
மதுரை மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கடைகள், போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தற்காலிக, தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வாக்களிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளில் விடுப்பில் செல்லும் தொழிலாளர்களின் அன்றைய நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான புகார்கள் அளிக்க 0452-2604388, 93603- 04805, 94430-21877 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோல, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டடம் மற்றும் இதர கட்டுமானப் பணிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
அவர்களுக்கு வாக்குப்பதிவு நாளில், சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என மதுரை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் கோ.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.