உசிலம்பட்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த இளம்பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.
உசிலம்பட்டி அருகேயுள்ள மங்கல்ரேவு பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி மனைவி லோகமணி (25). திருமணமாகி 3 ஆண்டுகளாகும் இவர்களுக்கு, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதியும் ஏற்பட்ட குடும்பச் சண்டையில் லோகமணி தனது உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி லோகமணி சனிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து சேடபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.