புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமியின் ஜாதி சான்றிதழை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி போலி ஜாதி சான்றிதழை பயன்படுத்தி ஒட்டபிடாரம் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரின் மகன் மற்றும் மகளும் போலி ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளனர். எனவே அவர்களின் ஜாதி சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என திருநெல்வேலியைச் சேர்ந்த சிவஜெயப்பிரகாஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மருத்துவர் கிருஷ்ணசாமி தரப்பில், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது அந்த விவரங்களை மறைத்து மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.