இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்ததில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே பாதுகாப்புப் படை உதவி கமாண்டன்ட் சிவசங்கரன் தலைமையில், துணை கண்காணிப்பாளர் மன்னர் மன்னன் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
மதுரை ரயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகள், பயணிகள் வருகைப் பகுதி, சரக்குகள் முன்பதிவு அலுவலகம், பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மதுரை ரயில் நிலையம் வழியாகச் சென்ற ரயில்களின் அனைத்துப் பெட்டிகளிலும் பயணிகளின் உடைமைகள் சோதனையிடப்பட்டன.