நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கும் நாள்களை 150 ஆக உயர்த்த வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் செல்லம்பட்டி ஒன்றியப் பேரவைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டம் கருமாத்தூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் வி.ரத்தினம் தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் ஏ.வி.அண்ணாமலை பேரவையைத் தொடக்கி வைத்துப் பேசினார். ஒன்றியச் செயலர் ஜெ.காசி வேலையறிக்கை சமர்ப்பித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.உமாமகேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி ஒன்றியச் செயலர் வி.பி.முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேரவையில் மாவட்டச் செயலர் சொ.பாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.
பேரவைக் கூட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதிய ஒன்றியத் தலைவராக என்.மலைச்சாமி, செயலராக ஜெ.காசி, பொருளாளராக பாண்டியன், துணைத் தலைவராக பெருமாள், துணைச் செயலராக சிங்கராஜ் உள்பட 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.
பேரவையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்கும் நாள்களை 150 ஆக உயர்த்த வேண்டும். சட்டக் கூலி ரூ.229 முழுமையாக வழங்க வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.