மதுரை அருகே வீடு புகுந்து செல்லிடப்பேசிகளை திருடிய இளைஞர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் சனிக்கிழமை சிக்கினார்.
மதுரை மாவட்டம் காதக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன் (44). இவர் வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்குள் மர்ம நபர் புகுந்து கௌதமனின் தங்கை கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்துள்ளார். இதில் விழித்துக் கொண்டு அவர், சத்தம்போட்டுள்ளார். இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் அந்த நபரை பிடிப்பதற்குள் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தியதில், வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்லிடப்பேசிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கௌதமன் அளித்த புகாரின் பேரில் அப்பன்திருப்பதி போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், அப்பன்திருப்பதி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் (26) என்பதும், காதக்கிணறு கௌதமன் வீட்டில் புகுந்து செல்லிடப்பேசிகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.