மதுரை அருகே 4 மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில், மாணவிகள் தங்கியிருந்த தனியார் காப்பகத்திற்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அய்யனார்புரம் பகுதியில் தனியார் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 25 மாணவிகள் தங்கி, அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தனர். இந்நிலையில் 4 மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக காப்பக நிர்வாகி ஆதிசிவனை போலீஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து இங்கு தங்கியிருந்த மாணவிகள் மதுரை, திருப்பரங்குன்றம், முத்துபட்டி, வாடிப்பட்டி பகுதிகளிலுள்ள அரசு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டு படிப்பைத் தொடர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மதுரை வடக்கு வட்டாட்சியர் செல்வராஜ் மற்றும் ஆர்டிஓ முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகள் தனியார் காப்பகத்திற்கு சீல் வைத்தனர்.