மதுரை மாவட்டம் மேலூர் நாகம்மாள் கோயில் 55-ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற முளைபாரி ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
மேலூர் நாகம்மாள் கோயில் திருவிழாவையொட்டி ஆடி மாதப்பிறப்பு நாளில் பக்தர்கள் அழகர்கோவில் மலை மீதுள்ள நூபுரகங்கையில் புனித நீராடி ராக்காயி அம்மன் கோயிலில் வழிபட்டு விரதம் மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து மேலூர் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விரமிருந்த பக்தர்கள் நவதானியப் பயிர்களை முளைப்பாரி பானைகளில் வளர்க்கத் தொடங்கினர்.
இந்த முளைப்பாரிகள் ஆங்காங்கே இருந்து ஊர்வலமாக நாகம்மாள் கோயிலுக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து மாலை 6 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் தொடங்கியது.
மேலூர் பேருந்து நிலையம், அழகர்கோவில் சாலை, பெரியகடைவீதி வழியாக சென்று மீண்டும் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம் நிறைவடைந்தது. இரவு நீண்டநேரம் நடைபெற்ற ஊர்வலத்தைக் காண, சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திண்டிருந்தனர்.
ஊர்வலத்தின் முடிவில் எடுத்து வரப்பட்ட நாகம்மாள் உற்சவர் சிலையை, பலரும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். வியாழக்கிழமை காலை அனைத்து முளைப்பாரிகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருவாதவூர் சாலையிலுள்ள குளத்தில் விடப்படும்.
இத்துடன் திருவிழா நிறைவடைகிறது.