மதுரை தியாகராஜர் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான மேஜைப் பந்து (டேபிள் டென்னிஸ்) போட்டியில் அமெரிக்கன் கல்லூரி அணி செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
காமராஜர் பல்கலைக் கழக கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான மேஜைப் பந்து போட்டி மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றன. போட்டியை தியாகராஜர் கலைக் கல்லூரி செயலர் கரு.தியாகராஜன் தொடக்கி வைத்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டிகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி முதலிடத்தைப் பெற்றது. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி 2 ஆம் இடத்தையும், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி 3 ஆம் இடத்தையும், திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரி 4 ஆம் இடத்தையும் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தியாகராஜர் கலைக் கல்லூரி முதல்வர் பாண்டியராஜன் பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். பரிசளிப்பு விழாவில் காமராஜர் பல்கலைக் கழக உடற்கல்வியியல் துறைத் தலைவர் ஜெகவீர பாண்டியன், தியாகராஜர் கல்லூரி உடற்கல்வியியல் துறைத் தலைவர் செல்வகுமார் மற்றும் கல்லூரிகளின் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.