ஜல்சக்தி அபியான் இயக்கத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து கிராமங்களிலும் சனிக்கிழமை (ஆக. 24) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவகால மாறுபாடு போன்ற காரணங்களால் பருவமழை பாதிக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து குடிநீர் பற்றாக்குறை போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் அதிகளவில் மழை பெய்யும்போது, அதன்மூலம் கிடைக்கும் தண்ணீரைச் சேமிக்காததால் பயனற்றதாகி போகிறது.
ஆகவே, மத்திய, மாநில அரசுகள் நீர்வள பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசு ஜல்சக்தி அபியான் இயக்கத்தை முன்னெடுத்து அனைத்து மாநிலங்களிலும் நீர் மேலாண்மைப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
அதேபோல, தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்துத் திட்டத்தில் பணிகள் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில்ல 318 சிறுபாசனக் கண்மாய்கள், 1576 ஊருணிகள், குளங்களில் அப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் மழைநீர் சேகரிப்பில் தனிநபரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என அரசு கருதுகிறது. அவரவர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கிடவும், குடிமராமத்துப் பணிகளில் பங்களிப்பைத் தருவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
இக் கூட்டத்தில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.