மதுரையில், மாநகராட்சி நீச்சல் குளத்தில் வெள்ளிக்கிழமை குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீரில் மூழ்கிய மற்றொரு மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை கோ.புதூர், காந்திபுரத்தைச் சேர்ந்த ரங்கசாமி-தனலட்சுமி தம்பதியின் மகன் பாலபிரபாகரன் (13). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், அதே பகுதியைச் சேர்ந்த தனது உதயகுமார் (13) உள்ளிட்ட நண்பர்களுடன் தல்லாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு பாலபிரபாகரன் குளிக்கச் சென்றுள்ளார்.
பாலபிரபாகரன் மற்றும் உதயகுமார் ஆகிய இருவரும் நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்றபோது, நீச்சல் தெரியாததால் நீரில் முழ்கியுள்ளனர். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாலபிரபாகரன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் இருந்த உதயக்குமாருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து நீச்சல் குள ஒப்பந்ததாரர்கள் லையோலோ ஜோசப் மற்றும் கண்ணன் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.