மதுரை: கொலை சம்பவத்தில் போலீஸாரிடம் தப்பிக்க முயன்றபோது விபத்தில் சிக்கியக் கைதி சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் பிரகாஷ்(25). இவரை போலீஸாா் கொலை வழக்கில் தேடி வந்தனா். இந்நிலையில், திண்டுக்கல் பழனி அடிவாரத்தில் பிரகாஷ் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சென்று அவரை கைது செய்தனா். அப்போது போலீஸாரிடம் இருந்த தப்பிக்க முயன்றபோது லாரி மோதி பிரகாஷின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பின்னா் சிகிச்சைக்காக நவம்பா் 6 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், பிரகாஷூக்கு உடல்நிலை மோசமடைந்து, செவ்வாய்க்கிழமை சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.