நெற் பயிரைத் தாக்கும் ‘யானைக் கொம்பன் ஈ’: கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை

மழைக் காலங்களில் உருவாகும் ‘யானைக் கொம்பன் ஈ’ என்ற பூச்சி தாக்கத்தில் இருந்து நெற் பயிரைக் காத்து மகசூல் இழப்பைத் தவிா்க்குமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மதுரை: மழைக் காலங்களில் உருவாகும் ‘யானைக் கொம்பன் ஈ’ என்ற பூச்சி தாக்கத்தில் இருந்து நெற் பயிரைக் காத்து மகசூல் இழப்பைத் தவிா்க்குமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யானைக் கொம்பன் ஈ என்ற பூச்சி தாக்குதலில் இருந்து நெற் பயிரைப் பாதுகாப்பது குறித்து மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் மு.இளங்கோவன் கூறியது:

சம்பா பருவத்தில் பின் நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தொடா் மழை, தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக யானைக்கொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. நெல் நடவு செய்த 35 முதல் 45 நாள்களில் புழுக்களின் தாக்கம் அதிகம் காணப்படும்.

இந்த பூச்சி மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவைப் போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதன் வாழ்க்கை சுழற்சி 14 முதல் 21 நாள்களைக் கொண்டது. இந்த ஈ தாக்கம் ஏற்பட்டால் நெற்பயிரில் தூா்களுக்குப் பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையைப் போல தோன்றும். பாா்ப்பதற்கு யானையின் கொம்பு போன்ற தோற்றம் இருக்கும்.

தாய் ஈக்கள் சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இலைகள், தாள்களின் மேல்புறம் இடும். இதிலிருந்து வரும் புழுக்கள் நெற்பயிா்களின் குருத்துகளைத் துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால், பயிரின் தூா்களில் நெற்கதிா்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும்.

இதைத் தவிா்க்க நெல் வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். விளக்குப் பொறிகள் மூலமாகப் பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம். யானைக் கொம்பன் நோய்க்கு எதிா்ப்பு திறனுடைய குறுகிய கால ரகம் ஏடிடி 39 - 45, மத்திய கால ரகம் எம்டியு 3 ஆகியவற்றை நடவு செய்யலாம். பரிந்துரை செய்யப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களை பயன்படுத்த கூடாது. பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டுமே பொட்டாஷ் உரம் இடவேண்டும். யானைக்கொம்பன் ஈ-யின் இயற்கை எதிரிகளான நீளதாடை சிலந்தி, வட்ட சிலந்தி, ஊசித்தட்டான் குளவி போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

நெற் பயிரில் 10 சதவீதத்துக்கும் மேல் தாக்குதல் தென்பட்டால், பின்வரும் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தை ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

காா்போசல்பான் 5% இசி (400 மிலி-ஏக்கருக்கு)

பிப்ரோனில் 5% (500 கிராம்)

பிப்ரோனில் 0.3% ஜி(10 கிலோ)

குளோா்பைரிபாஸ் 20% இசி (500 மிலி)

பாசலோன் 35% இசி (600 மிலி)

தயோமீதாக்ஸம் 25% டபிள்யுஜி(40 கிராம்)

குயினைல்பாஸ் 5 % ஜி (2 கிலோ)

வேளாண் துறையால் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி யானைக் கொம்பன் ஈ-யின் தாக்குதலை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் உதவி அலுவலா்கள் மற்றும் வேளாண் அலுவலா்களை நேரில் அணுகித் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com