அலங்காநல்லூர் அருகே விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் அருகே பி. மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(43). விவசாயியான இவர், தனது சகோதரி வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக மீனாட்சிபுரத்துக்கு குடும்பத்துடன் சனிக்கிழமை சென்று விட்டார். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து செல்வக்குமார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக செல்வக்குமார் அளித்தப்புகாரின்பேரில் அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.