மதுரையில் கணவரை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை பிபிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவர் மதுபோதையில் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாராம். இந்நிலையில், 2015 ஆம் ஆண்டில் நடந்த தகராறின்போது, சுப்புலட்சுமி, மாரிச்சாமியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை இந்த வழக்கில், கணவரை கொலை செய்த சுப்புலட்சுமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.