மத்திய அரசு அறிவித்த ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் சமர்ப்பிப்பதில் மேலூர் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இத்திட்டத்துக்கு தகுதியுடைய விவசாயிகள், தங்களது நிலத்தின் பட்டா, சிட்டா கணினி நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகிய சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், மேலூர் பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகள் இந்த உதவித்தொகை திட்டத்தில் இணைவதற்கு சான்றுகளுடன் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.