மதுரையில் மதுபானக்கூடத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன வாகன ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை கோ.புதூர் அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் இரண்டாவது தெருவைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் சிவா(23). இவர் சர்வேயர் காலனியில் உள்ள சிமென்ட் விற்பனை நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சர்வேயர் காலனி 120 அடி சாலையில் உள்ள மதுபானக்கூடத்துக்கு திங்கள்கிழமை இரவு சிவா மது அருந்தச் சென்றார். அப்போது மதுபானக்கூடத்தில் பணியாற்றும் தட்சிணாமூர்த்தி, இதயராஜா ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சிவா தனது நண்பரான கார்த்திக்கை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு மதுபானக்கூடத்துக்கு வருமாறு தெரிவித்தார். இதனால் கார்த்திக் மதுபானக்கூடத்துக்கு சென்று சிவாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். அதே நேரத்தில் இதயராஜா, தட்சிணாமூர்த்தி ஆகியோரும் தங்களது நண்பர்களை வரவழைத்தனர்.
மதுபானக் கூடத்தில் இருந்து சிவாவும், கார்த்திக்கும் வெளியே வந்த நேரத்தில் இதயராஜா, தட்சிணாமூர்த்தி அவர்களது நண்பர்கள் மூவர் சேர்ந்து சிவாவை கத்தியால் குத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்கச் சென்ற கார்த்திக்கையும் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலின்பேரில் கோ.புதூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சிவாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவாவின் தந்தை செல்லப்பாண்டி அளித்தப் புகாரின்பேரில் தட்சிணாமூர்த்தி, இதயராஜா உள்பட 5 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மதுபானக் கூடத்தை மூட வேண்டும். மதுபானக் கூட உரிமையாளரை கைது செய்ய வேண்டும். அதுவரை சடலத்தை வாங்கமாட்டோம் என்றுக் கூறி எஸ்.கொடிக்குளம் பகுதியில் சிவாவின் உறவினர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் சம்பவ இடத்துக்குச்சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தனர்.