மதுரை மாவட்டக் காவல் துறையின் மதுரை காவலன் செயலியில், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவுவதற்காகவும், மதுரை மாவட்டக் காவல் துறையின் சார்பில் மதுரை காவலன் செயலி கடந்த 2017-இல் தொடங்கப்பட்டது. இந்த செயலி மூலம், கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின்போது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
தற்போது, பொங்கல் பண்டிகையையொட்டி பாலமேடு (ஜன.16), அலங்காநல்லூர் (ஜன.17) ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நேரடியாகக் கண்டுகளிக்கும் வகையில், மதுரை காவலன் செயலியில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதேபோல், மதுரை மாவட்டக் காவல் துறையின் முகநூல் பக்கத்திலும் நேரலையாகக் காணலாம்.
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு செல்வோர் வாகன நிறுத்தும் இடங்கள், அவசர உதவி எண்கள், அவசர மருத்துவ உதவி மையங்கள் போன்ற தகவல்களையும், மதுரை காவலன் செயலியில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசதியை, ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியில் மதுரை காவலன் என்ற செயலியை பதிவு இறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கெனவே, செயலியை பயன்பாட்டில் வைத்திருப்பவர்கள், மீண்டும் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.