மதுரை மாவட்டம் எழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்து கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சார் பதிவாளர் கிருஷ்ணம்மாள் விடுமுறை என்பதால் எழுத்தர் ராஜ்குமார் அலுவலக பொறுப்பில் இருந்தார். போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் சிக்கியது. அப்பணத்தை போலீஸார் பறிமுதல் செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். போலீஸார் இரவு 7.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை இச்சோதனையில் ஈடுபட்டனர்.