உசிலம்பட்டி அருகே திங்கள்கிழமை கல்லூரி மினி பேருந்து அடுத்தடுத்த கார்களில் மோதி கவிழ்ந்ததில் கேரள மாணவர்கள் 14 பேர் காயம் அடைந்தனர்.
உசிலம்பட்டி அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் கேட்டரிங் பிரிவில் கேரள மாணவர்கள் படித்து வருகின்றனர். உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழகம் எதிரே உள்ள விடுதியில் தங்கி இவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் வழக்கம் போல் வகுப்புகள் முடிந்து மாலையில் கல்லூரி மினி பேருந்தில் விடுதிக்கு கிளம்பி வந்துள்ளனர். இந்நிலையில் மதுரை-உசிலம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கொங்கபட்டி அருகே வந்தபோது, உசிலம்பட்டியிலிருந்து மதுரை நோக்கி சென்ற 2 கார்கள் மீது மினி பேருந்து தொடர்ந்து அடுத்தடுத்து மோதியது. இதில் கல்லூரி மினி பேருந்து கவிழ்ந்தது.
அதில், பயணம் செய்த கேரளத்தைச் சேர்ந்த அபிசித், வைஷாக் உள்ளிட்ட 14 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.