பேருந்து பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் நகைகளை பறித்துச் சென்றவர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை திடீர் நகர் பாலாஜி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி சசிரேகா(36). இவர் உறவினர்களுடன் ஓசூரிலிருந்து மதுரைக்கு தனியார் பேருந்தில் வந்துள்ளார். அப்போது, மதுரை திடீர் நகர் அருகே சர்ச் பேருந்து நிறுத்ததில் இறங்கும் போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத நபர் சசிரேகா வைத்திருந்த கைப்பையை பறித்துக் கொண்டு சென்றுள்ளார். அந்த பையில் 5 பவுன் நகைகள் இருந்துள்ளன.
இதுகுறித்து சசிரேகா அளித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில், மதுரை கூடல்நகர் மல்லிகை தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஜெயஸ்ரீ. மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் வீட்டை பூட்டி விட்டு அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மகளுக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் உள்நோயாளியாக அனுமதித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ஒரு பவுன் தோடு மற்றும் ரூ. 14 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.