திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் ரூ. 80 லட்சத்தில் குடிமராமத்து செய்வது குறித்து பொதுப்பணித்துறையினர் விவசாயிகளிடம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.
தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம்( 2019 - 20) திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் ரூ.80 லட்சத்தில் குடிமராமத்து செய்யப்பட உள்ளது. தென்கால் கண்மாய் 823.34 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் குடிமராமத்து பணி செய்வது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் செல்வம் ஆகியோரின் உத்தரவின்படி புதன்கிழமை நடைபெற்றது.
தென்கால் கண்மாய் கரையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை உதவிபொறியாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் இக்கண்மாய் மூலம் விவசாயம் செய்பவர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு அவர்கள்மூலம் குடிமராமத்து பணி செய்ய வேண்டும். மேலும் விவசாயிகளின் மூதாதையர் பெயரில் உள்ள நிலங்களை தற்போது உள்ளவர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்து கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தினர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியது: தென்கால் கண்மாய் ஒருமுறை நிறைந்தால் சுமார் 9 மாதங்கள் வரை தண்ணீர் நிற்கும். கண்மாயில் தற்போது 2 மற்றும் 3 ஆவது மடைகள் பழுதடைந்ததால் அதன்வழியாக தண்ணீர் வீணாகி வெளியே சென்றுவிடுகிறது. எனவே பழுதான 2, 3 ஆவது மடைகளை சீரமைக்க வேண்டும். தலை மடையில் இருந்து கண்மாய் வரை உள்ள வரத்துக் கால்வாய், மழைநீர் வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர். கூட்டத்தில் பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர்கள் வரதமுனீஸ்வரன், கென்னடி, தென்கால் கண்மாய் நீர் பாசன சங்க நிர்வாகிகள் மகேந்திரன், மாயாண்டி, ஆறுமுகம், நாட்டாமை ராமசாமி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.