அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்து இருப்பதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலகத் தமிழ்ச்சங்க மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இம்மாநாட்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் பங்கேற்றார். மேலும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இதுதொடர்பாக துணைவேந்தர் கூறியது: அமெரிக்க நாட்டின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவில் அமைச்சர் மாபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் என்ற அடிப்படையில் நானும் நியமிக்கப்பட்டுள்ளேன். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 4 மில்லியன் டாலர்கள் நிதி வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வரை 3 மில்லியன் டாலர்கள் நிதி வழங்கப்பட்டுள்ளது. 1 மில்லியன் டாலர் நிதி வசூலிக்கும் பணியும் நடந்து வருகிறது. எனவே விரைவில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டு விடும். அங்கு அமைக்கப்படும் தமிழ் இருக்கை தமிழ் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது என்றார்.